இந்திய மீனவர்கள் விடுதலை

-யாழ் நிருபர்-

நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நெடுந்தீவு கடலினருகே கடந்த 17ஆம் திகதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டுமெனவும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீன்பிடி படகை அரசுடமையாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.