பின்தொடரும் கறுப்பு உருவம் : மாடியில் இருந்து குதித்த மாணவி

இந்தியா-தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவியொருவர் பாடசாலை மாடிக்கட்டடத்தில் இருந்து குதித்துள்ளார்.

இந்தியா-தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் தூயமேரி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பில் கற்று வநத மாணவி ஒருவரே இவ்வாறு பாடசாலை மாடிக்கட்டடத்தில் இருந்து குதித்துள்ளார்.

குறித்த பாடசாலையின் விடுதியில் தங்கிப்படித்து வந்த குறித்த 11 ஆம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதமாக தினமும் வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று வருமாறு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலையில் சக மாணவிகள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த மாணவி மட்டும் பாடசாலையின் முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் மாணவியின் இரு கால்களிலும் எலும்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக  தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட   மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இரு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சாயர்புரம் பொலிஸார் நடாத்திய விசாரணையில் குறித்த மாணவியும், அவரது தந்தையும் அளித்த தகவல்கள் பொலிசாரையே திகிலடைய செய்தது.

கடந்த ஒரு மாதமாகவே கருப்பு உருவம் ஒன்று தன்னை பின் தொடர்வதாக தங்கள் மகள் கூறி வந்ததாகவும், நேரில் சென்று பார்த்த போது அவருடன் எவரும் இல்லை என்பது தெரிய வந்ததாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மாணவியிடம் விசாரித்த போது, சம்பவத்தன்று அந்த கருப்பு உருவம் தன்னுடன் விளையாடியதாகவும், தன்னை தனியாக பாடசாலையின் மாடிக்கு அழைத்துச்சென்ற அந்த உருவம், இருவரும் சேர்ந்து குதித்து விளையாடலாம் என்று கூறியதால் அதன் பேச்சை கேட்டு தான் மாடியில் இருந்து குதித்ததாகவும், கீழே விழுந்த பின்னர் மேலே பார்த்தால் அந்த கருப்பு உருவம் குதிக்காமல் தன்னை ஏமாற்றி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

பொலிசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அங்க பாருங்க அந்த உருவம் தான்…! ஜன்னல் கிட்ட இருந்து என்ன கூப்பிடுது பாருங்க..! என்று திகிலூட்டி இருக்கிறாள் அந்த மாணவி

தகவல் அறிந்து சென்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேரடியாக அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார். அவரிடமும் அந்த மாணவி, தன்னை விரட்டும் கருப்பு உருவக்கதையை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்றதாக 309 வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார், அந்த மாணவியின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மனோ தத்துவ நிபுணர் மூலம் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

அதே நேரத்தில் பாடசாலையில் கருப்பு உருவம் சுற்றுவதாக மாணவி தெரிவித்த சம்பவம் அந்த பாடசாலை மாணவிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.