உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தம்மைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து, மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.