வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா?

-யாழ் நிருபர்-

இலங்கை அரசாங்கம் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியை இருண்ட யுகத்தில் தள்ளியுள்ளதா ? என்ற அச்சமும் கேள்வியும் எழுந்துள்ளது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்த போசாக்கு போன்றவற்றால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்ததுடன் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் செயற்பாடுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன .

இவ்வாறான நிலையில் எஞ்சிய நடுத்தர மற்றும் குறைந்த நிலை வருமானம் பெறும் மாணவர்களின் கல்விக்கு தேவையான கற்றல் உபகரணங்களின் திடீர் விலை அதிகரிப்பு மேலும் பல மாணவர்களின் கல்வியை பாதிக்கவுள்ளது.

கற்றல் உபகரணங்கள் கடந்த கால விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரித்துள்ளது மாறாக குடும்பங்களின் வருமானம் கடந்த காலங்களை விட மிகவும் கீழ் நிலையை அடைந்துள்ளது.

இதனால் எதிர் காலத்தில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வி இருண்ட யுகத்தில் செல்லும் அபாயம் மேலோங்கி வருகின்றது.

மந்த போசாக்கும் கற்றல் உபகரணங்களின் விலை ஏற்றங்களும் பாடசாலைக் கல்வியை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கையை எதிர் காலத்தில் அதிகரிக்கச் செய்வதுடன் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கும் வழி திறப்பதாக அமையும் ஆபத்துக்கள் வறிய குடும்ப மாணவர்களுக்கு காத்திருக்கின்றது என தெரிவித்தார்.