கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் யானை தாக்கி 7 பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சில்லிக்கொடியாறு பகுதியில் பண்ணையொன்றில் பராமரிப்பாளராக கடமையாற்றி வந்த காஞ்சிரங்குடா பகுதியை சோர்ந்த 65 வயதையுடைய பாலிப் போடி அரியநாயகம் என்பவரே நேற்று திகதி இரவு 10.00 மணியளவில் யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர், சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.