-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளித் தோட்டத்திற்குள் கஞ்சா செடிகளை மறைத்து வளர்த்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த தோட்டத்தை சோதனையிட்டபோது எட்டு கஞ்சா செடிகளை கண்டுபிடித்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி -சிறுபிட்டிகுளம் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் நிரோஷன் வயது 26 என்பவர் என தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை எட்டு கஞ்சா செடிகளுடன் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்