வெடிபொருட்களுடன் லொறி ஒன்று மீட்பு

பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது லொறி ஒன்றில் வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த லொறியை சோதனையிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் குழாய்களில் பொதி செய்யப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய 89 குழாய்கள், 80 அடி நீளம் கொண்ட 21 சர்வீஸ் கம்பிகள் மற்றும் தலா 100 டெட்டனேட்டர்கள் அடங்கிய 9 பெட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.