அம்பாறை மாவட்டம் : உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத்தாக்கல்

-அம்பாறை நிருபர்-

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

எவ்வாறாயினும் இன்று நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணத்தை வைப்பிலிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளன.

அத்துடன் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

இன்று 02 அரசியல் கட்சிகள் உட்பட பல சுயேட்சைக்குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்தன.

இதன்படி இன்று இறக்காமம், அக்கரைப்பற்று மாநகர சபை, திருக்கோவில், அட்டாளைச்சேனை, தமண, நாமல் ஓயா, காரைதீவு ஆகிய 07 உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தேசிய மக்கள் சக்தி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல். ஜீ. வசந்த பியதிஸ்ஸ தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உட்பட சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளன.இதன்படி நாவிதன்வெளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதுடன் மாலை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, கட்டுப்பணத்தை வைப்பிலிட்ட நாள் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சுமார் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.