உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மாற்றம்?
- Advertisement -
-அம்பாறை நிருபர்-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு நேற்று புதன்கிழமை அன்று வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, வழக்கானது விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணி கடந்த தவணையின் போது குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், பிணை கோரிக்கைக்கான மன்றிற்கு அதிகாரமின்மை நீண்ட காலமாக விசாரணை இழுத்தடிக்கப்படுகின்ற நிலைமை தொடர்பாக விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி மன்றிற்கு தெரிவித்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படும்.
இவ்வாறு விசாரணைக்கு இவ்வழக்கு எடுக்கப்பட்ட பின்னர் அந்த ஆவணங்களை முறையாக கல்முனை மேல் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டு குறித்த வழக்கு மீறப்பெறுதல் (கைவாங்கல்) தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்றில் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
மேலும் குறித்த விசாரணையின் போது மன்றில் பிரதான பரிசோதகரின் கைது தொடர்பில் ஆட்சேபனையை சட்டத்தரணி முன்வைத்ததுடன் பிரதி வாதியான பொலிஸ் பரிசோதகரை குறித்த வழக்கு தொடர்பில் பல்வேறு விண்ணப்பங்களை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக கல்முனை – சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் அம்பாறை பொலிஸ் உப கராஜின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
—
- Advertisement -