-பதுளை நிருபர்-
பதுளை, தல்தென பகுதியில் வீடொன்றின் மேல் மாடியில் வளர்க்கப்பட்ட 10 அடி மற்றும் 09 அடி உயரம் கொண்ட இரண்டு கஞ்சா மரங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தல்தென பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளைப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரின் வீட்டின் இரண்டாவது மாடியின் பின்பகுதியில் இரண்டு தொட்டிகளில் வளர்க்கப்பட்ட இந்த இரண்டு கஞ்சா மரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
