-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதி ஒருவர், இன்று திங்கட்கிழமை அதிகாலை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.
எனினும், கொழும்பு நீதிமன்றமும் அந்த தீர்ப்பினை உறுதி செய்தது. அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த கைதி இன்று திங்கட்கிழமை அதிகாலை, யாழ் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.