துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -பாலம்போட்டாறு காட்டுப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம் போட்டாறு காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக ஐந்து பேர் சென்றபோது அதில் ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் தம்பலகாமம் -பொற்கேணி பகுதியைச் சேர்ந்த யூ.எல்.எம்.பரீட் (48 வயது) என்பவர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த நபரின் தோள் சந்து பகுதியில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்