பேஸ்புக் விருந்து : 10 பெண்கள் உட்பட 41 பேர் கைது
பாணந்துறை, ஹோரதுடுவ ஹோட்டல் ஒன்றில் நேற்று சனிக்கிழமை பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 10 பெண்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது எட்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கஞ்சாவை வைத்திருந்ததாகவும், விருந்தில் பங்கேற்றதற்காக 8 பெண்கள் உட்பட 21 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விருந்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குழுவில் இருந்த இரு ஆண்களை பாணந்துறை வடக்கு பொலிஸார் இச்சம்பவத்தின் போது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், தெஹிவளை, காலி, கலகெடிஹேன, பலாங்கொடை, ரந்தபுர, கல்கிசை, ஹெட்டிமுல்ல, கொழும்பு 15 மற்றும் களனி பிரதேசங்களை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
