6 வருடங்களாக பூட்டிய வீட்டில் மூதாட்டியை கொடுமை செய்த இளைஞன்

தமிழகத்தில் முத்துப்பேட்டை பகுதியில் சொத்துக்காக மூதாட்டி ஒருவரை 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சிறை வைத்து உறவுக்கார இளைஞன் கொடுமை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருவாரூர் மாவட்டம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்த பழனித்துரை, ஜெயம் (வயது – 65) தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கணவர் பழனித்துரை கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட உறவினர் ஒருவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியை வீட்டில் வைத்து பூட்டி சிறை வைத்துள்ளார். அவருக்கு வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு வேளை மட்டுமே சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், பூட்டிய வீட்டில் ஜன்னல் வெளிச்சத்தில் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல், உடை கூட இல்லாமல், உடல் மெலிந்த நிலையில் மூதாட்டி தனிமையில் இயற்கை உபாதைகளை கழித்தும், அதே இடத்தில் உறங்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள மூதாட்டியை காப்பாற்றுவதற்காக அந்த பகுதியை சிலர் அவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.இது தொடர்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்த மூதாட்டி பராமரிப்பின்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.