1953 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இன்று பாரிய ஹர்த்தால்

-கல்முனை நிருபர்-

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.

இதேநேரம், இன்றைய ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

ஹர்த்தால் போராட்டத்திற்கு 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பல பொது, அரை பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பொது போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கடைகள் அடைக்கப்பட்டு சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், தொடருந்து, பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக இன்று மதியம் 12 மணிமுதல் ஒரு மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

1953ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய ஹர்த்தாலுக்கு பின்னர் 69 வருடங்களைக் கடந்து இன்று நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய ஹர்த்தால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு அங்கமாக இன்று தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் நடவடிக்கையில் கல்முனை மார்க்கெட் முழுமையாக செயலிழந்து வெறிச்சோடிக் கிடப்பதனை காணக்கூடியதாக உள்ளது.