அம்பாறை இகினியாகல சேனாநாயக்க சமுத்திரம் இங்கினியாகல நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் 12 வருடங்களுக்கு பின் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விசாலமான நீர்த்தேக்கமான அம்பாறை இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் இங்கினியாகல நீர்த்தேக்கம் மொனராகலை, பதுளை, அம்பாறை மாவட்டங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக அதன் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் அந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்லோயா வலது கரை பாதாகொடை ஊடாக தமணை, மலையடிக்குளம், எட்டாம் கட்டை சந்தி மற்றும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கால்வாய்கள், வயல்கள் ஊடாக வரும் வெள்ள நீர் சம்புக்களப்பு, பட்டியடிப்பிட்டி , ஆறுகளை நிறைத்து அக்கரைப்பற்று முகத்துவாரங்களினூடாக கடலை நோக்கி செல்லும்.
மேலும் கல்லோயா இடது கரை இது சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஆறுகள் குளங்களை நிரப்பி களியோடை ஆறு, மற்றும் மாவடிப்பள்ளி ஆறு, போன்ற பகுதிகளூடாக சென்று கடலை சென்றடையும்.
இதனால், பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இப்பகுதிகளிலுள்ள கால்நடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறும், இப்பிரதேசங்களிலுள்ள ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்குமாறும், பொது மக்கள் எச்சரிக்கப்படுவதுடன், இந்த வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்படும் முதலைகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வரும் அபாயமுள்ளதால் அவைகளிலுமிருந்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
