-பதுளை நிருபர்-
தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் பசறையில் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பசறை பொது சந்தை கட்டிட தொகுதிக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுப்பட்டு இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பங்குவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை விஷேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை கைது செய்யும் போது 6 கிராம் 170 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.