ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மரநடுகை வேலைத்திட்டம்
-மஸ்கெலியா நிருபர்-
பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மரநடுகை வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுற்றாடலைப் பாதுகாப்பதும், அரச நிறுவன வளாகங்களைப் பசுமையாக்குவதும் இதன் பிரதான நோக்கமாகுமென ஹட்டன் பொலிஸ் சுற்றாடல் பிரிவின் அதிகாரி சுந்தர அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் மாவட்ட நீதிபதி திரு. ஏ. பீற்றர் போல் கலந்துகொண்டார். அவர் அடையாள ரீதியாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெறுமதிமிக்க பல மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் ஹட்டன் நீதிமன்ற பதிவாளர் இசுரு சேனானந்த, ஹட்டன் பொலிஸ் சுற்றாடல் பிரிவின் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
