-நுவரெலியா நிருபர்-
ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க வந்துள்ளார்.
இதன்போது, இவர் குறித்த சுற்றுலா விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) மதியம் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு விடுதியில் கிழே விழுந்து கிடந்துள்ளார்.
பின்னர், நண்பர்கள் அனைவரும் கீழே விழுந்த நபரை மீண்டும் அறைக்குள் கூடிச் சென்றுள்ளனர்.
எனினும், இன்று சனிக்கிழமை (06) காலை குறித்த நபர் வெளியில் வரவில்லை என்பதால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ளை பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் பொலிஸார் மேற்படி விடுதிக்கு சென்று அறையை சோதனையிட்டதில் சடலத்தை கண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று மதியம் நடைபெற்றதோடு, சடலத்தை ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து பொலிஸார் சடலத்தை டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என திம்புள்ளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்