-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப்பகுதிக்குட்பட்ட பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த முற்காப்பு நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கு இணங்க இடம் பெற்ற குறித்த சிரமதான பணியில் பொது மக்களும் இணைந்து ஈடுபட்டனர்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவு பாதிக்கப்பட்டிருந்தன. இதனை எதிர்வரும் காலங்களில் குறைக்கும் நோக்குடன் 120 குடும்பங்களின் நன்மை கருதி பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க தம்பலகாமம் பிரதேச சபை (ஜே.சீ.பி) மற்றும் பொதுமக்கள் இணைந்து சிரமதான அடிப்படையில் வடிகான்கள் சுத்தம் செய்யப்பட்டது.
இதன் போது கலந்து கொண்ட மக்களுக்கான அரிசி பொதிகள் வன்னி ஹோப் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் குறித்த கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


