-அம்பாறை நிருபர்-
மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.
பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு நேற்று மாணவர்களும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் வெள்ள அபாயத்தால் பாதிக்கப்படும் என சந்தேகிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த அகற்றக்கூடிய அனைத்து பொருட்களும் தஸ்தாவேஜுகளும் பல்கலைக்கழக அனர்த்த முகாமைத்துவ குழுவில் கண்காணிப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
எதிர்காலத்தில் மேலதிக வெள்ள அபாயம் ஏற்படலாம் என எதிர்பார்க்கும் இடங்களில் உள்ள ஆவணங்களையும் பல்கலைக்கழக சொத்துக்களையும் பாதுகாக்கும் அகற்றும் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இழப்புக்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் பின்னர் அறிவிப்பதாகவும் தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளையும் கள நிலவரங்களையும் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினர் உன்னிப்பாக ஆராய்ந்து வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பல்கலைக்கழக ஊழியர்களுடன் இணைந்து முப்படையினரும் மீட்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



