வீதியில் சென்ற சிறுவனை மோதி இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்

-மன்னார் நிருபர்-

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன், அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் இன்று காலை மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியூடாக நடந்து சென்ற நிலையில், குறித்த வீதியூடாக அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை மோதியதோடு, சிறிது தூரம் மோட்டார் சைக்கிலில் குறித்த சிறுவன் இழுத்துச் செல்லப்பட்டார்.

உடனடியாக குறித்த சிறுவன் அப்பகுதியில் சென்றவர்களால் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் படுகாயம் நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த விபத்து தொடர்பாகவும், விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராகவும், பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.