வீடு தீப்பற்றி சிறுமி பரிதாபமாக பலி

-யாழ் நிருபர்-

சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர் பரிதாபகராக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்தில் ஒலிபெருக்கி சத்தம் அதிகமாக இருந்ததால் கதவை பூட்டி விட்டு அறையில் குறித்த சிறுமி மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்திருக்கிறார்.

அச்சமயம் விளக்கு விழுந்து வீடு தீப்பற்றுகையில் சிறுமியின் ஆடைகளையும் தீ விட்டு வைக்கவில்லை.

இதன்போது பேரூந்துக்கென தந்தையரால் சேமித்து வைக்கப்பட்ட மண்ணெண்ணெயும் அறையில் காணப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெயும் தீப்பிடிக்கவே வீடு சுவாலை விட்டு எரிந்திருக்கிறது.

இதனையடுத்து வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சிறுமியை உடல் கருகிய நிலையில் மீட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சடலம் சங்கானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் மகாஜனா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்கும் சுதன் சதுர்சியா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.