மட்டக்களப்பில் விறகுக்கட்டை வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி

-மட்டக்களப்பு நிருபர்-

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடியாற்று பகுதியில் விறகு வெட்டச் சென்றவர் மீது விறகுக்கட்டை வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியர் வீதி முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி சந்திரசேகரம்  (46 வயது) என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்

சம்பவ தினத்தன்று தனது மனைவியுடன் சில்லிக்குடியாற்றுப் பகுதிக்கு தனது வாடியில் விறகு விற்பனைக்காக நீண்ட மரக்குற்றியை வெட்டி சுமந்து வரும் வழியில் தவறுதலாக நிலத்தில் விழ்ந்த போது, விறகு குற்றி அவரது உடலின் மேல் விழுந்துள்ளது.

சம்பவத்தை கண்ட மனைவி உறவினர்களின் உதவியுடன் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போது, குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.