– யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு மற்றும் பச்சிளைப்பள்ளி மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக காணப்படும் மருதங்கேணி புதுக்காட்டு பிதான வீதி பாரியளவு விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தில் உள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்
கடந்த காலங்களில் கள்ள மண் அதாவது சட்ட விரோத மண் அகழ்வு அதிகரித்து காணப்படுகிறது.
இவ் சட்ட விரோதமாக அகப்படும் மண்ணினை கடத்தற் கும்பல்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு விற்பனை செய்வதற்கு இந்த பிரதான பாதையினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாக வீதி யோரம் அதிகளவாக பரவி இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
இதனால் நேற்றையதினம் அதிகளவாக பெய்த கன மழையின் போது கள்ள மண் கும்பல்கள் தமது ஆதிக்கத்தை அதிகளவு மேற்கொண்டு உள்ளனர். இதனை அவதானித்த பிரதேச மக்கள் இது சம்பந்தமாக விசேட அதிரடிப்படையினர்க்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் மருதங்கேணி புதுக்காட்டு பகுதியை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முற்றுகை இடுவதை அறிந்த கள்ள மண் மாஃபியாக்கள் ஏற்றி சென்ற அனுமதியற்ற மண்ணை வீதியோரங்களில் பறித்து விட்டு சென்றுள்ளனர்.
இதனால் இன்று காலை சுமார் 3 டிப்பர்களுக்கு அதிகமான மண்கள் வீதியோரங்களில் பரவி காணப்படுவதால் பாரியளவு விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தில் உள்ளதாகவும் இன்று காலை ஒரு சில சிறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வீதி யோரங்களில் காணப்படும் மண்ணை கிளிநொச்சி வீதி அதிகார சபை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
