விபத்தில் மூவர் படுகாயம்

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைப் பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பதுளையிலிருந்து பசறை நோக்கி பயணித்த ஸ்கூட்டி ரக உந்துருளியும், பசறையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்றும், மோதி விபத்துக்குள்ளானதில் பத்தாங்கட்டைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, பசறையிலிருந்து வெவேக்கலை செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது இரு உந்துருளிகளிலும் பயணித்த 20,19,33 வயதுகளையுடைய மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இருவர் பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஒருவர் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்‌.

இவ்விபத்தில் பேருந்துக்கு எவ்வித சேதமும் ஏற்படாத போதிலும் இரு உந்துருளிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் முகமாக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.