வாகரையில் “100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் “

‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் இருபத்தொன்பதாம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளி கிராமத்தில் இன்று இடம்பெற்றது. இப் போராட்டமானது கதிரவெளிக்கிராம கடற்கரையில் மக்கள் ஒன்றிணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, இல்மனைட் அகழாதே என்று பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது கிராம மக்கள் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளான சட்ட விரோத இல்மனைட் அகழ்வு, சட்ட விரோதமான இழுவை படகு மீன்பிடி நடவடிக்கைகள், அத்துமீறிய காணி அபகரிபுக்கள் மற்றும் மீன்பிடியை ஜீவனோபாயம தொழிலாக கொண்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமை உள்ளிட்ட தமது பிரச்சனைகள் தொடர்பாக தமது கோரிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரிடம் முன்வைத்தனர்.

அத்தோடு வாகரை பிரதேசத்தில் உருவாக்கபடவுள்ள இறால் பண்ணையின் மூலம் எங்கள் பிறதேசத்தின் வளம் குன்றும் என்றும் அது தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் திரு.இசைதீன் அவர்களும். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இணைபாளர் திரு. கண்டுமணி லவகுசராசா அவர்களும் வாகரை பிரதேச மீனவ மற்றும் விவசாய சங்கத்தினர், பெண்கள் அமைப்பினர், பிரதேச அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.