-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவத்தின் 12 ஆவது திருவிழாகிய கம்சன் போர்திருவிழா நேற்று திங்கட்கிழமை மாலை வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகியது.
இதன்போது விநாயகர், வல்லிபுர ஆழ்வார், சீதேவி, பூமாதேவி, ஆண்டாள் ஆகிய தெய்வங்கள், உள்வீதி யுடாக வலம்வந்து வெளிவீதி வந்து அருள் பாலித்தனர்.
கடந்த 16 ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமானது. ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற திருவிழாவில் வடமராட்சி இளைஞர்களால் கம்சன் காட்டிய இதிகாச வரலாற்றினை எடுத்துக் காட்டும் வகையில் நாடகமும், நிகழ்வுகளும் இதன்போது ஆற்றப்பட்டன.
இந்த திருவிழாவில் வடமராட்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த அடியார்கள் கலந்து கொண்டனர்.



