யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்-

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலர் உணவுப் பொதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வழங்கிவைக்கப்பட்டது.
.
பலாலி, மயிலிட்டி, ஊறணி, தையிட்டி, போன்ற பகுதிகளில் அங்குள்ள கிராம சேவையாளர்களினால் தெரிவு செய்யப்பட்ட 260 குடும்பங்களுக்கான 3350 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவி வருகின்ற உணவு தட்டுப்பாடு உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவங்களை கொண்ட குடும்பங்களுக்கு மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கான நிவாரண பணிகள் நடைபெற்றுக் கொண்டு வரும் இந்த நேரத்தில் யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும், குறித்த பகுதிகளில் கிராம சேவையாளர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.