யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து கலந்துரையாடுவோம். நிதி சேகரித்து தமிழகம்சென்றும் கலந்துரையாடவுள்ளோம். இந்திய மத்திய அமைச்சர் யாழ்ப்பாணம் வராது விட்டால் கொழும்புசென்று சந்திப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
புதிதாக கொண்டுவரப்படவுள்ள கடற்தொழில் சட்ட திருத்த முன்வரைவு தொடர்பான கருத்துக்கள் கோரப்படுகின்றன. நியாயமான விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அமைச்சரவைக்கு சமர்பிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
கடற்தொழில் அமைச்சருடனும் இச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
வெளிநாட்டு படகுகள் மீன்பிடிப்பது தொடர்பில் 1979 களிலே சட்டம் உள்ளது. அவ்வாறு உள்ளதால் குறித்தசட்டம் மூலம் எமது நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றே எமக்கு தோன்றுகின்றது, எனத் தெரிவித்தார்.