முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் நினைவாக “தலைவர் தின” நிகழ்வு

-கல்முனை நிருபர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 22 வது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவுப் பேருரையும் கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கல்முனைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கிப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஷன் அக்தர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக விசேட துஆப் பிரார்த்தனை செய்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் காரியாலயமானது கடந்த 30 வருடங்களாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் காலத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை பிராந்திய காரியாலயமாக இயங்கிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.