மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் ஆலோசிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை அண்மையில் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியிருந்தது. அங்கு, முன்மொழிவு குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளை பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணையகமும் தனது கருத்துக்களை வழங்கும்.
அதன் பின்னர், 3 வாரங்களுக்கு பிரேரணை பகிரங்கப்படுத்தப்பட்டு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.
பின்னர் அனைத்து முன்மொழிவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு புதிய பிரேரணை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும்.
இதேவேளை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தவுடன் மின்சார கட்டணத்தை திருத்தும் பணியை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.