வங்காளவிரிகுடாவில் “மிதிலி” புயலானது நிலை கொண்டுள்ளதால் கடலிலுக்குச் செல்லும் மீனவர்களும் கடற்படையினரும் கடலில் பயணிப்போரும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது புயலாக மாறியுள்ளது.
இந்த புயலானது வடக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை கடக்கவுள்ளது .
இதன் போது காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றராகக் காணப்படும் எனவும் கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.