மாட்டை திருடி விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

-திருகோணமலை நிருபர்-

 

திருகோணமலை-பாத்தியகம பகுதியில் மாடு ஒன்றினை திருடி மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் -பாத்தியகம பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே திலகரத்தின என்பவருடைய மாடு காணாமல் போய் உள்ளதாக கடந்த 2023/06/ 26 ஆம் திகதி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டினையடுத்து இன்னுமொரு நபர் குறித்த மாட்டை வளர்த்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் குறித்த மாட்டை வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மாட்டை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கந்தளாய் – வென்ராசன்புர பகுதியில் வசித்து வரும் (PC 88920) என்ற இலக்கமுடைய அபேகோன் முதியன்சலாகே நிஷாந்த தென்னகோன் (31வயது) என்பவரை இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்