இந்தியாவில் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட அரியனாம்பேட்டை கிராமத்தில் மருத்துவமனைக்கு வரமறுத்த தாய் தனது மகளின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.
அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரபோஸ் (வயது – 43) என்பவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது – 35) என்பவர் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு ஹேமேஷ் என்ற 8 வயதில் மகன் ஒருவன் உள்ளார்.
இந்த நிலையில் மஞ்சுளாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் அவர் ஊர்க்காவல் படை பணிக்கு செல்லாமல் இருந்தார். மேலும் லால்குடி அருகே தாளக்குடியில் உள்ள அவரது தாய் அன்னக்கிளி வீட்டில் கடந்த ஒரு மாதமாக அவர் தங்கியிருந்து திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வியாழக்கிழமை மஞ்சுளா தனது தாய் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அரியனாம்பேட்டைக்கு வந்துள்ளார்.
இதையடுத்து மஞ்சுளாவை தேடிக்கொண்டு அவரது தாய் அன்னக்கிளி அங்கு வந்துள்ளார். பின்னர் மஞ்சுளாவை மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருமாறு அன்னக்கிளி நேற்று முன்தினம் வெள்ளி கிழமை அழைத்துள்ளார்.
இந்த நிலையில் மஞ்சுளா சிகிச்சைக்கு வர மறுத்து தனது தாய் மற்றும் மாமியார், மாமனாருடன் தகராறு செய்து சிகிச்சைக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாய்க்கும் மகளுக்கும் அன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் துாங்கியுள்ளனர்.
பின்னர் நேற்று ஞாயிற்று கிழமை காலை எழுந்த அன்னக்கிளி தனது மகள் மஞ்சுளாவின் தலையில் கல்லை போட்டுள்ளார். இதில் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் மஞ்சுளா துடிதுடித்து இறந்தார். இதைத் தொடர்ந்து அன்னக்கிளி தொட்டியம் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி பொலிஸ் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின்இ தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அன்னக்கிளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.