மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அதன்படி இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.
விமான நிலைய ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை இந்த நிறுவனம் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தை இயக்குவதன் மூலம் குறித்த தனியார் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி அரசாங்கத்துக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது மத்தள சர்வதேச விமான நிலையத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் 2 பில்லியன் ரூபாவினை செலவிடுகிறது.
எனவே, இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இந்த பாரியளவான தொகையை சேமிக்க முடியும் எனவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.