மது போதையில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய பொலிஸார்

-மன்னார் நிருபர்-

பொலிஸார் இருவர் மது போதையில் கடுமையாக தாக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 ஆம் பிட்டி கிராமத்தை சேர்ந்த சி.நகுலேஸ்வரன் (வயது-28) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குறித்த குடும்பஸ்தர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நான் வீட்டில் இருந்த போது இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து மது விற்பனை நிலையத்திற்கு வருமாறும்,உனக்கு பொங்கல் நீதான் பார்ட்டி வைக்க வேண்டும் என கூறி வரும் போது 5 ஆயிரம் ரூபாய் கொண்டு வா என கூறினார்கள்.

நான் பணத்துடன் மதுபானசாலைக்கு சென்றேன்.என்னிடம் இருந்து 3 000 ரூபாய் பணத்தை பெற்று குறித்த போலீசார் மதுபானம் அருந்தினார்கள்.மிகுதி 2 000 ரூபாவை என்னிடம் தந்து நீ இதை நீதிமன்றத்திற்கு கொண்டு போ உனக்கு பழைய வழக்கு உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

எனக்கு எவ்வித வழக்கும் இல்லை என நான் குறித்த பொலிஸாருக்கு தெரிவித்தேன். உடனடியாக எனது இரண்டு கைக்கும் மதுபானசாலைக்கு முன் கை விலங்கை போட்டு கடுமையாக தாக்கினார்கள்.

மோட்டார் சைக்கிலில் ஏற்றியும் என்னை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.கடுமையாக தாக்கியதினால் என்னை தாக்காதீர்கள் நான் சாகப்போகிறேன் என்று கூறினேன்.

நீ செத்துப் போ என கூறி என்னை தள்ளி விட்டார்கள்.பொலிஸார் தாக்கியதில் எனது வலது கால் உடைந்ததோடு, இடது காலிலும் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் என்னை இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஓ.ஐ.சி. கூறினார் “இருக்கின்ற இரண்டு வாள்களையும் எடுத்து இவனுக்கு வழக்கை பதிவு செய்யுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு கேஸ் ஆகும்” என்றார்.பின்னர் எனக்கு வழக்கு எழுதிய பின்னர் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.