மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த உதவி அதிபர்

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைக்கு வருகை தந்த குறித்த உதவி அதிபர் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

பின்னர் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.

ஆனால் அவரால் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாமல் போயுள்ளது.

அதனை தொடர்ந்து, தனது உடல் கட்டுப்பாட்டினை இழந்து கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில், பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் கீழே விழுந்த உதவி அதிபரை தூக்குவதற்கு முயற்சித்த வேளையிலேயே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பாடசாலையில் பெற்றோர்களுக்காக மாதாந்த கூட்டமும் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்களும் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உதவி அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.