மட்டக்களப்பு துறைநீலவனை வைத்தியசாலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டி வசதி ஏற்படுத்தி தருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடந்த கேள்வி பதிலின் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது, இருப்பினும் அங்கு இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய போதிலும் தற்போது ஒரு வைத்தியர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளார் அவரும் மற்றுமொரு வைத்தியசாலையிலும் கடமைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளதால் இந்தப் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் இம்மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இருந்த போதிலும், தற்போது ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் உள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.