மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை நேற்று செவ்வாய்க்கிழமை திகதி விவசாய அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படும் உரப்பிரச்சனை தொடர்பாக விவசாய அமைச்சரை தெளிவுபடுத்தியதுடன் மாவட்ட விவசாயிகளுக்கு சுமார் எட்டாயிரம் (8000) மெட்ரிக் தொன் யூரியா மற்றும் சுமார் நான்காயிரத்து ஐந்நூறு (4500) மெட்ரிக் தொன் (எம்மோபி) குடலப் பசளை தேவைப்பாடாகவுள்ளமை தொடர்பாகவும் அமைச்சரை தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், விவசாயிகளுக்குரிய எரிபொருள் விடயத்தில் முன்னுரிமை வழங்குவது சம்பந்தமாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் விவசாய அமைச்சரை மட்டக்களப்பிற்கு வருகை தந்து நேரடியாக கள விஜயத்தினை மேற்கொண்டு விவசாய அமைப்புக்களுடனான நேரடி கலந்துரையாடலையும் மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் தான் விவசாய அமைச்சரை தெளிவுபடுத்தி முன்வைத்த வேண்டுகோளிற்கமைய விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இம்மாத இறுதிக்குள் மட்டக்களப்பிற்கு வருகை தந்து விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக இதன்போது உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.