பொறியில் சிக்கிய சிறுத்தையை உயிருடன் மீட்க எடுத்த நடவடிக்கை தோல்வி : சிறுத்தை உயிரிழப்பு

அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் மீட்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் காட்டுபன்றிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை; கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.

சிறுத்தை மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து. சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத் தந்ததுடன், சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், சிறுத்தை ஏறிய மரத்தை வெட்டியுள்ளனர்.

இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையை ரந்தெனிகல வனவிலங்குகள் திணைக்களத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

அத்துடன், பொறியில் அமைக்கபட்டிருந்த கம்பியால் சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், இது தொடர்பில் அட்டன் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்க சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.