பொன். சிவபாலனின் 25வது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளரும்,சிறந்த அடுக்குமொழிப் பேச்சாளரும், கவிஞரும், பொது நலன் அக்கறையாளருமான அமரர் பொன். சிவபாலனின் 25ஆவது வருட நினைவு நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் அன்னாரது சித்தங்கேணி இல்லத்தில் நடைபெற்றது.

குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலின்போது திருவுருப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ்ப்பாண மாநகரசபையில் மாநகர போக்குவரத்து சம்பந்தமான உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன் கொல்லப்பட்டார்.

அவருடன் யாழ்ப்பாண நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ் பொலிஸ் அத்தியடசகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் அதிகாரி மோகனதாஸ், யாழ்ப்பாண நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெராட், யாழ்ப்பாண மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பொன். சிவபாலன்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்