வெயாங்கொடை பிரசேத்தில் பெற்றதாயை தன்னால் பராமரிக்க முடியாது என மகன் அவரை வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளார்.
வெயாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதான வயோதிப தாயையே மகன் இவ்வாறு கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாய்க்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர், அவர்கள் இருவரும் தற்போது திருமணமாகி தனித்தனியாக வாழ்கின்றனர்.
வயோதிப தாயின் கணவர் பல வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில், அங்குனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் தனது மகளின் பராமரிப்பில் வயோதிப தாய் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்.
ஆனால் மகளும் மகளின் கணவரும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் தனது மகனின் பராமரிப்பை எதிர்பார்த்து வெயாங்கொடை தல்கஸ்கோட் பகுதியில் வசிக்கும் தனது மகனிடம் வந்தார்.
ஆனால் அன்று முதல் மருமகள் மற்றும் மகனின் மிரட்டல்கள் மத்தியில் அழுதுகொண்டே இருந்த இந்த வயோதிப தாய், உதவிக்காக வெயாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்த வெயாங்கொடை பொலிஸார் வயோதிப தாயின் மகனை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு மகன், தாயை கவனிக்க முடியாது என்றும், இனிமேல் தாயுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்றும் தொடர்ந்து கூறியுள்ளார். வெயாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசங்க ரங்கன, தாயின் பெறுமதியைப் பற்றி மகனுக்கு விளக்கிய போதிலும், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இறுதியில் வயதான தாய் தன் சகோதரியின் மகனால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.