இலங்கையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் அனைத்து அரச ஊழியர்களும் தத்தமது அரச நிறுவனங்களில் ஒன்றுகூடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்போது அரச ஊழியர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் நாளை முற்பகல் 09.00 மணிக்கு அதிபர் அலுவலக வளாகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை பொதுமக்களுக்கு வினைத்திறனுள்ள மற்றும் பயனுள்ள அரச சேவையை வழங்குவதற்கு முழு அரச சேவையும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வு நடத்தப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.