நாட்டில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி நடைமுறையின் கீழ் இலங்கையில் உள்ள ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ஊழியர்களாக பணிபுரிந்து 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரிக் கொள்கை மற்றும் சட்டப்பிரிவின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் நிஹால் விஜேவர்தன தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஒருவர் நீண்ட கால சேகரிப்பின் மூலம் வாகனம் வாங்கலாம், வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் ஊடாக கிடைத்த பணம், பரிசாக கிடைத்த பணம், அல்லது மாதாந்தம் செலுத்தி வாகனம் வாங்குவதற்கு வருமான வரி விதிக்கப்படாது.
தாங்கள் வருமானமாக பெறும் 12 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
இதேவேளை தொழிலுக்கு கிடைக்கும் சம்பளத்திலேயே வருமான வரி அறவிடப்படும். அந்த சம்பள பணத்தில் வாகனம் வாங்கினால் அதற்கு வருமான வரி அறவிடப்படாது.
காணி அல்லது வீடு கொள்வனவு செய்யும் போதும் அந்த நபருக்கு எவ்வாறு பணம் கிடைத்ததென்பதனை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.
ஒரு வாகனம், வீடு அல்லது காணிக்கு முழு தொகையையும் செலுத்தி கொள்வனவு செய்கின்றார் என்றால் அது தொடர்பான தகவல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைத்துவிடும்.
எனினும் அந்த பணம் எப்படி கிடைத்ததென்பதனை ஆராய்ந்து அது வரி செலுத்தாத வருமானமாக இருந்தால் மாத்திரமே வரி அறவிடப்படும்.“ என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.