கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவை 9 மாதங்களின் பின் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு ஆசன முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியாக கோரிக்கைகளுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மடு திருத்தலத்தில் வைத்து அண்மையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு புகையிரத சேவை வெள்ளிக்கிழமை(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்படும் புகையிரதம் அன்றைய தினம் இரவு இரவு 10.48 மணிக்கு தலைமன்னாரை சென்றடையும்.
இந்த நிலையில் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட ஆசன முன்பதிவு மற்றும் 2 ஆம் வகுப்பு ஆசன முன்பதிவுகளை மேற்கொண்டு மன்னார் மாவட்டத்தில் இருந்து மக்கள் பணயங்களை தொடர முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
எனினும் கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு ஆசன முன்பதிவுகளை மேற்கொண்டு மக்கள் பயணங்களை மேற்கொள்கின்ற போதும் தலைமன்னாரில் இருந்து மக்கள் முன்பதிவுகளை மேற்கொண்டு கொழும்பிற்கு செல்ல முடியாத நிலையில் புகையிரத நிலையங்களில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தலைமன்னார் தொடக்கம் மடு வரையிலான புகையிரத நிலையங்களில் ஆசன முன்பதிவு செய்யக்கூடிய வசதிகள் இது வரை இல்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களில் காணப்பட்ட கணினி வசதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளமையினாலேயே குறித்த முன்பதிவுகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
-இதனால் மன்னார் மாவட்ட மக்கள் சாதாரண பயண சீட்டுக்களை பெற்று தமது பயணத்தை தொடர்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
