பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவிற்கு பிடியாணை

ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய இந்த நாட்டில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைக் கொடுக்க வேண்டிய இந்த அரசு, பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் எங்களைக் கூட தண்டிக்கும் அளவிற்கே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா ) தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் கொக்கட்டிச்சோலைப் படுகொலை நினைவேந்தல் அனுஸ்டித்தமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தகவலறிந்து நீதிமன்றில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாடடின் ஜனநாயக ஆட்சி இன்று எங்களை நீதிமன்றம் வரை கொண்டு நிறுத்தியிருக்கின்றது. உண்மையிலேயே எங்களுக்கு பிடியானை இருப்பதாக யாருமே தெரிவிக்கவில்லை.

நேற்றைய தினம் விவசாய அமைப்புக் கூட்டத்திற்காக கொக்கட்டிச்சோலை சென்ற போது அங்கு ஒரு பொலிஸ் அதிகாரி எனக்கும் தர்மலிங்கம் சுரேஸ் அவர்களுக்கும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினால் பிடியாணை இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் தான் விசாரித்த போது கொக்கட்டிச்சோலைப் படுகொலை என்று சொல்லப்படும் 1987ம் ஆண்டு காலகட்டத்திலே மகிழடித்தீவு இரால் பண்;ணையைச் சுற்றியிருந்தவர்கள்,  இறால் பண்ணைக்குள் தஞ்சம் அடைந்தவர்கள், எந்தவித போராட்ட இயக்கங்களுடனும்  தொடர்புபடாத பொதுமக்களை இலங்கை அரச படைகள் கொன்று குவித்தனர்.

அவ்வாறு கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவாக மகிழடித்தீவு சந்தியிலே அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபியிலே ஆண்டு தோறும் அவர்களை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்துவது வழமை.

இந்த ஆண்டு ஜனவரியிலே கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கடும் கெடுபிடி இருந்தது. போராட்ட காலத்தில மரணித்த பொதுமக்களைக் கூட நினைவு கூரக் கூடாது என்கின்ற கண்டிப்பான உத்தரவு இருந்தது.

2015 தொடக்கம் 2019 வரை எமது உறவுகளை நினைவு கூருவதற்கு எமக்கு உரிமை இருந்தது. ஆனால் 2019லே ஆட்சிக்கு வந்த கோட்டபாய அரசாங்கம் அதனை மறுத்திருந்தது. அந்தக் காலகட்டத்திலே பொது மக்கள் நினைவுகளை அனுஸ்டிக்கத் தயங்கிய போது நாங்கள் கடந்த ஜனவரி மாதம் அவர்களை நினைவு கூர்ந்திருந்தோம்.

அங்கு எம்மை நினைவு கூரக் கூடாது என்பதற்கான எவ்வ்வித நீதிமன்ற தடையுத்தரவுகளும் வழங்கப்படவில்லை. இருந்தும் நினைவுகூரலை மேற்கொண்டு நாங்கள் விளக்கேற்றும் போது கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் அங்கு வந்து இடையூறுகளை விளைவித்தனர்.

இருந்தும் நாங்கள் அந்த நினைவேந்தலைச் செய்தோம். அவ்வாறு இந்நிகழ்வுக்கு அவர்களால் தடையுத்தரவு வழங்கப்படவில்லை என்பதோடு, தடைத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறியமைக்காக வைக்கப்பட்ட வழக்கிற்கான அழைப்பாணை எமக்கு வழங்கப்பட்டு நீதிமன்றம் செல்லாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை.

நிகழ்வுக்கான தடையும் தரப்படவில்லை, வழக்கிற்கு வருமாறு அழைப்பாணையம் இல்லை, ஆனால் இடையில் எமக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக அறியக் கிடைத்தது.

அந்த நிலையில் நாங்கள் எமது சட்டத்தரணிகள் ஊடாக இன்றை தினம் வழக்கினை அழைத்து நீதிமன்றில் ஆஜராகியிருந்தோம். எதிர்வரும் பதினொராம் மாதம் இரண்டாம் திகதிக்கு வழக்கு மீண்டும் போடப்பட்டுள்ளது.

இந்த நாட்டில நடக்கின்ற விடயங்களை இந்த நாட்டு மக்கள் மாத்திரமலல்ல சர்வதேசமும் அறிந்து வைத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையககத்திலே 2012ம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கு எதிராக மாறி மாறி பிரேரணைகள் வந்து கொண்டிருக்;கின்றன.

தற்போது இலங்கை பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ள இந்நிலையிலும் கடந்த வாரமளவில் ஐ.நா.வில் மேற்கொள்ளப்பட்ட பிரேரணையில் போர்க்குற்றங்களோடு சேர்த்து பொருளாதாரக் குற்றங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த வேளையிலே ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய இந்த நாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைக் கொடுக்க வேண்டிய இந்த அரசு பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் எங்களைக் கூட தண்டிக்கும் அளவிற்கு இருக்கின்றது.

இவ்வாறாக எங்களைப் பயமுறுத்துவதன் ஊடாக எமக்காக உயிர்;நீத்த மக்களை நாங்கள் நினைவு கூருவதைத் தடுத்து விடலாம் என்று நினைக்கின்றார்கள்.

அது முடியாத காரியம், நாங்கள் எமக்காக உயிர்நீத்த எமது மக்களை தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து கொண்டே இருப்போம், என்று தெரிவித்துள்ளார்.