யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நேற்று புதன் கிழமை சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முயற்சித்த மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.
பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன், பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் நின்ற இரு இளைஞர்கள் சேட்டை விட்டதுடன், விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
அவ்வேளை பரீட்சை எழுதி விட்டு வந்த சக மாணவன் இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாக்க முயற்சித்த போது இருவரும் மாணவனை தலைக்கவசத்தால் மூர்க்க தனமாக தாக்கி விட்டு அவ்விடத்தை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
நெல்லியடி பொலிஸாருக்கு இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளால் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்ததுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அவருடன் சென்ற மற்றைய நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.