லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், இன்று சனிக்கிழமை, லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் லொறியின் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற லொறி, பிரதான வீதியில் இருந்து விலகி சுமார் 100 அடி ஆழமுள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் விபத்து சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
