நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இடைநிறுத்தம்

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் குழப்பத்திற்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா தனியார் போக்குவரத்து சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தங்களுக்கு எரிபொருட்கள் கிடைக்கவில்லை எனவும் இ.போ.ச பேருந்துகளுக்கு மாத்திரம் எரிபொருட்கள் வழங்கப்படுவதை ஆட்சேபனை செய்துமே தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கின்ற இந்த நிலைமையில் வசந்த கால நிகழ்வுகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கோசமிட்டவாறு வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்ற இடத்தை முற்றுகையிட்டனர்.

இதன் காரணமாக வசந்த கால ஆரம்ப நிகழ்வுளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலைமை காரணமாக நிகழ்வுகள் அனைத்தும் இடைநடுவில் நிறுத்தப்பட்டதுடன் அங்கு குழப்பமான ஒரு நிலைமை ஏற்பட்டது.